Advertisement

சைவ தத்துவங்களின் உண்மை விளக்கம், கேள்வியும் பதிலும் - பகுதி 7

Hi to all viewers, 

We tried our level best to get correct interpretation of this most valuable saivam Books " Unmai Vilakkam - part 7". If there is any mistake (or) wrong explanation, please write to us using comments section to correct it. Thanks and forgive us, if there is any hiccups happened knowingly or unknowingly..

உண்மை விளக்கம் (பகுதி - 7), இப்பகுதியில், அடுத்த 41- 45 கேள்வி பதில்கள்; உங்கள் பார்வைக்கு...

41. முத்தியில் ஆன்மா இறைவனோடு கலந்திருப்பதற்குக் கூறப்படும் மூன்று உவமைகள் யாவை?

முத்தி நிலையில் உயிரும் சிவமும் உள்ளன ஆயின் பிரித்தறியவாராது ஒன்றாய் உள்ளன. உயிர் சிவனது திருவருள் வியாபகத்துள் அடங்கித் தனித்த ஒரு முதலாய்க் காணப்படாது நிற்றலே உயிர் சிவத்தோடு ஒன்றாதல் அல்லது இரண்டறக் கலத்தல் ஆகும். உயிரானது சிவத்தோடு ஒன்றாகி இல்லாமற் போய்விடவில்லை. உயிர் சிவத்தோடு ஒன்றி நின்று அதனையே இடையறாது உணர்ந்து அனுபவிக்கின்றது. அவ்வாறு ஒன்றி நிற்பது எது போலும் என்று காட்டுதற்குப் பல உவமைகளை எடுத்துக்கூறுகிறார் ஆசிரியர்.

  1. பேரின்ப முத்தியை அடைந்த பெருமக்கள் பழத்திற் சுவைபோலவும், பூவில் மணம் போலவும், நெருப்பில் வெம்மை போலவும், வீணையில் இன்னிசை போலவும் சிவ முதற் பொருளோடு ஒன்றிப் பிரியாது இயைந்து நிற்பர். இவ்வாறு சிவாகமங்கள் கூறும்.
  2. உயிர் எப்போதும் தனித்து இருக்காது. மலங்களை பற்றி இருக்கும், அல்லது சிவத்தை பற்றி இருக்கும். கட்டு நிலையில் உயிருக்கு உதவும் கருவிகளாக வந்த தத்துவங்கள் எல்லாம் உயிருக்கு வேறாய் நில்லாமல், உயிரே என்னும்படி இயைந்து ஒற்றுமைப்பட்டு நிற்கின்றன. அதுபோல, முத்தி நிலையில் மலம் நீங்கிய ஆன்மாக்கள் சிவத்திற் பொருந்தித் தாம் வேறாய் நில்லாமல் சிவமே எனும்படி அதனோடு ஒன்றி இயைந்திருப்பர். இவ்வாறு ஆகமங்கள் உறுதிபடக் கூறும்.
  3. பொழுது விடிந்து சூரியன் புறப்பட்டவுடன் அதன் பேரொளி முன், வானத்திலுள்ள தேய்பிறையாகிய நிலவின் ஒளி அடங்கிப் போய் விடுகிறது. நிலவின் ஒளி இருந்தும் இல்லையாய் நிற்கிறது. அதுபோல முதல்வன் திருவடியை அணைந்த உயிர் வெள்ளமெனப் பெருகும் இறையின்பத்தில் மூழ்கித் தான் என வேறு நில்லாது, தான் சிறிதும் தோன்றாது, அடங்கி நின்று இன்புறும்.

42. பாடல் 46 இல் சித்தமலம் என்பதன் பொருள் என்ன?

சித்த மலம் என்பது உயிர் அறிவைப் பற்றியிருக்கும் மும்மலத்தையும் (அல்லது பொதுவாக சொல்லும் ஆணவமலம்) குறிக்கும்.

43. முப்பொருளும் நித்தம் என்றால் முத்தியில் பாசம் நீங்கியதா இல்லையா?

முத்தியில் ஆணவ மலத்தின் நிலை என்ன? இத்தை விளைவித்தல் என்பதன் மூலம் மலமும் முத்திக் காலத்தில் நித்தமாக இருக்கிறது என்பது தெரிகிறது. அது எவ்வாறு இருக்கும் என்பதை நோக்குவோம். உயிரிடத்தில் திருவருள் ஒளி மேலிடுதலால் ஆணவ இருள் அதன் கீழ்ப்பட்டு அடங்கி விடுகிறது. மந்திரத்தால் நெருப்பின் ஆற்றலைக் கட்டுப்படுத்த வல்லவர் நெருப்பின் நடுவில் நின்றாலும் அஃது அவரைச் சுடுதல் இல்லை. அப்பொழுது நெருப்பினது சுடும் சத்தி எங்கே போயிற்று? அச் சத்தி எங்கும் போய் விடவில்லை. இல்லாமற் கெட்டொழிய வில்லை. இருந்தும் இல்லாததாய் அவரிடத்தில் செல்ல மாட்டாமல் மடங்கி நிற்கிறது. அது போல முத்திக் காலத்தில் ஆணவ மலம் இருந்தும் அதன் மறைப்பு சிவமே எனும்படி ஒன்றாய் நிற்கும் உயிரிடத்துச் செல்ல மாட்டாமையால், அது தன் சத்தி மடங்கி இல்லாதது போல் நிற்கும். 

நடராச வடிவத்தில் முயலகனைத் திருவடிக்கீழ் அழுத்தி வைத்திருப்பதிலிருந்து முத்தியில் ஆணவ மலம் அடக்கப்பட்டுள்ளதேயன்றி இல்லாமற் போகவில்லை என்று தெளியலாம். இவ்வாறு மல சத்தி மடங்கி நிற்றலையே மலம் கெடுதல் என்றும், மலம் நீங்குதல் என்றும் நூல்கள் கூறும். மொத்தத்தில் இறையின்பம் உயிரிடத்து விளையவொட்டாது தடுத்து நின்ற ஆணவ மலம் முத்தியில் அங்ஙனம் செய்ய மாட்டாமல் இருக்கும். இங்ஙனம் மலம் தான் மடங்கி நிற்றலால் இறையின்பம் உயிரிடத்தே விளைவதற்கு இவ்வகையில் காரணமாயிற்று. இதனைக் கருதியே இத்தை விளைவித்தல் மலம் எனக் குறிப்பிட்டார் ஆசிரியர். இதுவரை கூறியவற்றால், முத்தியில் ஆணவ மலம் உண்டு; ஆயினும் அதனால் உண்டாகும் பந்தம் இல்லை என்பது புலனாகும். இந்நிலையை விடுபட்ட நிலை என்று கூறலாம் தானே.

44. முத்தியில் முப்பொருளின் நிலை என்ன?

நன்மாணாக்கனே, பரமுத்தியில் முப்பொருள்களும் உள்ள முறைமையைக் கூறுகிறோம். கேள். தூய பேரின்பத்தை நுகர்ந்து கொண்டிருப்பது உயிர். அவ்வின்பத்தை இடையீடின்றிக் கொடுத்துக் கொண்டிருப்பவன் இறைவன். அப்பேரின்பத்தை விளைவித்து நிற்பது மலம். இவ்வுண்மையை உணர்ந்து கொள்.

45. "இத்தை விளைவித்தல் மலம்" என்பதன் பொருள் யாது?

மலம் உயிரை விட்டு நீங்கி அல்லது விலகி நிற்றலால் உயிருக்கு முத்தி கிடைக்கிறது. இவ்வாறு மலம் நீங்கி நிற்றலாலேயே உயிருக்கு பேரின்பம் கிடைத்ததால், இத்தை விளைவித்தல் மலம் எனப்பட்டது.

திருச்சிற்றம்பலம்...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement
Advertisement
Advertisement
Advertisement