Advertisement

சைவ தத்துவங்களின் உண்மை விளக்கம், கேள்வியும் பதிலும் - பகுதி 8

Hi to all viewers, 

We tried our level best to get correct interpretation of this most valuable saivam Books " Unmai Vilakkam - part 8". If there is any mistake (or) wrong explanation, please write to us using comments section to correct it. Thanks and forgive us, if there is any hiccups happened knowingly or unknowingly..

உண்மை விளக்கம் (பகுதி - 8), இப்பகுதியில், அடுத்த 46 - 51 கேள்வி பதில்கள்; உங்கள் பார்வைக்கு...

46. முத்தி நிலை உயிருக்கு இயற்கையா, செயற்கையா?

முத்தி நிலை உயிருக்கு இயற்கை.

47. முத்தியில் சிவம் சென்று ஆன்மாவைச் சேர்ந்ததா ? இல்லை ஆன்மா சென்று சிவத்தைச் சேர்ந்ததா?

உயிர் சென்று சிவனோடு ஒன்றும் எனில் எங்கும் நிறைந்துள்ள பூரணத்தன்மை சிவனுக்கு இல்லை என்று கொள்ள நேரும். அது கூடாது. இனிச் சிவனே சென்று உயிரோடு பொருந்துவான் எனில், சிவன் உயிருக்கு வேறாய் இருந்தான் என்று கொள்ள நேரும். அதுவும் கூடாது. இவனும் சென்று அவனை அடைதல் இல்லை. அவனும் வந்து இவனை அடைதல் இல்லை. மற்று இருவரும் இயைந்து நிற்கும் முறைமைதான் யாது எனில், குருடனது கண்ணின் குற்றமாகிய படலம் நீங்க, அக்கண்ணொளியும், சூரியவொளியும் தம்முள் இயைந்து நிற்றல் போன்றதே அவனும் இவனும் பிரிப்பின்றி நிற்கும் முறைமை.

48. முத்தியை அடைவதற்குரிய வழி யாது?

குரு வழிபாடு, இலிங்க வழிபாடு, சங்கம வழிபாடு ஆகிய இம்மூன்று திருவருள் நிலைகளே முத்திக்கு உரிய வாயில்கள் ஆகும். இவ்விடங்களில் இறைவனை இடைவிடாது நினைந்து தொழுது இறைஞ்சுபவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள்.

49. முப்பத்தாறு தத்துவங்களைப் பற்றி அறிவதால் நமக்கு என்ன பயன்?

முப்பத்தாறு தத்துவங்களை நாம் அறிவதால், நாம் யார், நமக்குரிய கருவிகளை எவை, அவை எதற்காக கொடுக்கப்பட்டிருக்கின்றன, இறைவன் யார் என்பதை உணரலாம். இதனால், இக் கருவிகளை பயன்படுத்தி இறைவனை வணங்கி முத்தி நிலை அடையலாம்.

50. திருவைந்தெழுத்தை ஓதும் முறை, நிற்கும் முறை யாது?

திருவைந்தெழுத்தில் ஒவ்வோர் எழுத்திற்கு ஒவ்வொரு பொருள் அமையும்.

திருவருளைப் பெற விரும்புவோன் உலகியலில் நின்று நகாரத்தை முதலில் வைத்து ஓதினால் திருவருள் வெளிப்படாது. உலகியலிலிருந்து நீங்கி, வீட்டு நெறியில் அறிவை நெறிப்படுத்தி நின்று, சிகாரத்தை முதலில் வைத்து ஓதினால் திருவருள் உன் உணர்வில் வெளிப்பட்டுத் தோன்றும். ஆகலின் நீ அவ்வாறு நின்று, அவ்வாறு ஓதுக.

திருவெழுத்து ஐந்தையும் அண்ணலாகிய சிவனைக் குறிக்கும் சிகாரம் முதலாக வைத்து இடையறாது எண்ணி வந்தால், திருவருள் வெளிப்பட்டு உயிரைக் கேவலமும் சகலமும் நீங்கிய அருள் நிலையில் சேர்க்கும்; எல்லையற்ற சிவானந்தத்தை நுகரச் செய்யும்; அந்நிலையில் இருளான ஆணவ மலம் பற்றறக் கழியும்

51. தாத்துவிகங்கள் என்பது என்ன? அவை எத்தனை?

தத்துவங்களின் கூறுகளும் காரியங்களும் தாத்துவிகம் எனப்படும். தைசத அகங்காரம், வைகாரிக அகங்காரம், பூதாதி அகங்காரம் ஆகிய மூன்றும் அகங்காரத்தின் கூறுகள் என்பது நாம் அறிந்தது. ஆதலின் அவை தாத்துவிகங்களாம். அதுபற்றியே அவை தத்துவங்களோடு வைத்து எண்ணப் பெறவில்லை. பல்வேறு வகையான உடம்புகளும், அவ்வுடம்புகளின் புறத்தும் அகத்தும் உள்ள உறப்புக்களும் தத்துவங்களின் காரியங்களாகும். ஆதலால் அவை தாத்துவிகங்கள் எனப்படும். உடம்பாக அமையும் தாத்துவிகங்கள் அறுபது ஆகும்.

*உண்மை விளக்கம் கேள்வி பதில் தொடர் இத்துடன் நிறைவுற்றது.*

திருச்சிற்றம்பலம்...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement
Advertisement
Advertisement
Advertisement